அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்: சர்ச்சை நாளாகுமா அக்டோபர் 7?
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இரண்டு முக்கிய கூட்டங்களில் தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்திலும், அதிமுக கட்சி முக்கிய கூட்டத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கலந்து கொள்வது வழக்கம்.
ஆனால், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் பற்றி அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும் என நேற்று (செப்டம்பர் 28) அறிவிப்பு வெளியான பின்னர், முக்கிய கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
2021ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் ஆகஸ்ட் மாதம் எழுந்தது. இதைத்தொடர்ந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் பன்னீர்செல்வம் ,துணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் உள்ள எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கூட்டறிக்கையில், முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவை கட்சி ஆலோசித்து முடிவு செய்யும் என்றும் அது குறித்து யாரும் விவாதிக்கவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்வண்ணம் செயற்குழு கூட்டத்தில் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் வெளியிடப்பட்ட அறிவிப்பு, அக்டோபர் 7ம்தேதிவரை காத்திருக்கும் நிலைக்கு அதிமுக தொண்டர்களை தள்ளியுள்ளது.
அதிமுக அமைச்சர்களோ, எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சமமாக பார்ப்பதாக கூறுகின்றனர். உண்மையில் செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும், அந்த கூட்டத்தின் தாக்கம் என்ன என இந்த விவகாரங்களை நெருக்கமாக கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
தலைமை செயலகத்தில் நடந்த கொரோனா ஊரடங்கு குறித்த கூட்டத்திற்கு பன்னீர்செல்வம் வரவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன், அவர் தனக்கான பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இருப்பதாக தெரிகிறது என்கிறார்.
பன்னீர்செல்வம் கடந்த ஆண்டுகளில் எவ்வாறு செயல்பட்டார் என்பதை பார்க்க வேண்டும். அவர் தனது மகன் ரவீந்திரநாத் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும் என்பதை உறுதி செய்தார். தன்னுடன் பயணம் செய்த பிற கட்சி தலைவர்களுக்கு பொறுப்புகளை வாங்கித் தருவதில் பெரிய முன்னேற்றத்தை அவர் காணவில்லை. அவரது தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன என்பது வரை வரலாறு. நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை யாரும் எடுக்கவில்லை. அதன் விளைவாக அவர் தலைமை செயலக கூட்டத்தை நிராகரித்திருப்பார் என்று ஊகிக்கிறேன். தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழலில் அவர் இருக்கிறார் என்பதைத்தான் இது உணர்த்துகிறது, என்கிறார் ராதாகிருஷ்ணன்.